You will make it....

You will make it....
Showing posts with label Trading Plan. Show all posts
Showing posts with label Trading Plan. Show all posts

Sunday, January 3, 2010

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 3)

PLAN A TRADE, TRADE THE PLAN

திட்டமிடுதலில் முதல் விஷயமாக லாப இலக்கு பற்றி பார்த்தோம். லாப இலக்கு பற்றி முடிவு செய்யும் முன் பங்குகளில் ஏற்ற இறக்தத்தை பற்றி தெரிந்து கொள்ளுவது நல்லது. பொதுவாக எந்த ஒரு பங்கும் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருப்பதுமில்லை தொடர்ந்து இறங்கிக்கொண்டே இருப்பதுமில்லை. விதிவிலக்காக ஏதாவது செய்தியின் அடிப்படையில் தொடர்ந்து ஏற்றம் அல்லது இறக்கம் இருக்கலாம். ஒரு பங்கு குறைந்தபட்சமாக 3 முதல் 5 நாள் ஏற்றத்தில் இருக்கும் அதேமாதிரி இறக்கத்திலும் இருக்கும். வர்த்தகம் செய்யும் போது அந்த 3 முதல் 5 நாட்களில் லாபத்தை சம்பாதிக்க வேண்டும். இதெல்லாம் நல்லாத்தான் இருக்குது - ஆனா எப்போ ஏறும் எப்போ இறங்கும் என்பது எப்படி தெரியும்? இது விஷயமாக வரும் பதிவுகளில் பார்க்கலாம். அதற்கு முன் திட்டமிடுதலை பார்ப்போம். லாப இலக்கு என்பது குறிப்பிட்ட சதவீதமாக இருக்கலாம் (ஒரு நாளைக்கு ௨% அல்லது பங்கின் Resistance -ஐ அடிப்படையாக வைத்து லாப இலக்கு நிர்ணயிக்கலாம்). லாப இலக்கு இல்லாமல் வர்த்தகம் என்பது கண்ணை கட்டிக்கொண்டு காட்டுக்குள் செல்வது போல. ஒரு வேலை பத்திரமாக கரை சேரலாம் அல்லது காட்டுக்குள்ளே தொலைந்தே போகலாம்... எனவே லாப இலக்கு அத்தியாவசியம்.

இனி திட்டமிடுதலில் அடுத்து பார்க்க வேண்டியது "சொந்த பணத்தில் தான் வர்த்தகம் செய்ய வேண்டும்" என்பது. நாம் எவ்வளவுதான் கவனமாக பங்குகளை தேர்ந்தெடுத்து வாங்கினாலும், திடீரென ஏதாவது ஒரு செய்தியை வைத்து பங்குகளின் விலை தற்காலிகமாக குறைய வைப்பு உண்டு. அந்த மாதிரி நேரத்தில், நம்முடைய சொந்த பணம் என்றால், பங்கின் விலை ஏறும் வரை பங்குகளை வைத்து கொண்டிருக்கலாம், இதுவே கடன் வாங்கிய பணம் என்றால் திருப்பி செலுத்த வேண்டுமே என்னும் பிரச்சினையினால் நஷ்டத்திற்கு பங்குகளை விற்க வேண்டுய சூழலுக்கு நாம் தள்ளப்படலாம், அதனால் என்றுமே சொந்த பணத்தில்தான் வர்த்தகம் செய்ய வேண்டும்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டியது, "குறைந்த பணத்தில் வர்த்தகம் ஆரம்பிக்க வேண்டும்". ஏனென்றால், அனுபவம்தான் ஆசான் என்று சொல்வதுபோல், நாம் நம்மால் தாங்க முடிந்த நஷ்டத்தின் அளவில் குறைந்த பணத்தில் வர்த்தகம் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக வர்த்தகத்தின் அளவை கூட்டலாம். இதை ஏன் சொல்கிறேன் என்தால் ஒருவேளை நம்முடைய வர்த்தகம் நாம் நினைத்த மாதிரி லாபத்திற்கு வரவில்லை என்றால், நஷ்டம் நம்மால் தாங்க முடியும் அளவில் இருக்கும்.

அடுத்து நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், "பங்குகளை வர்த்தகம் செய்யுங்கள், காதல் கொள்ளாதீர்கள்". எந்த பங்குமே எப்பொழுதுமே கூடிக்கொண்டே இருப்பதில்லை. அதனால் ஒரு பங்கில் ஓரளவு லாபம் பார்த்த பின், அடுத்த முறை வாங்கும்போது இது இன்னும் மேலே செல்ல வாய்ப்பு இருக்கிறதா என்பதை கவனித்துதான் வாங்க வேண்டும். எனக்கு இந்த நிறுவனம் பிடிக்கும், இது நல்ல நிறுவனம் என்று சொல்லிக்கொண்டு வர்தகதிர்க்காக மீண்டும் மீண்டும் வாங்குவது சரியல்ல, இதனால் நீங்கள் போட்ட பணம் அந்த பங்கில் முடங்கிப்போக வாய்ப்பு உண்டு. வர்த்தகத்தில் அடிப்படையே, அடிக்கடி வாங்கி விற்றுக்கொண்டிருக்க வேண்டும். நல்ல நிறுவனமாக இருக்கலாம், அனால் குறுகிய காலத்தில் அது லாபம் தரக்கூடியதாக இருக்காது. நீண்ட காலத்தில் நல்ல பண்ணுகள் அனைத்துமே குறிகிய கால வர்த்தகத்திற்கு ஏற்றதாக இருக்க வாய்ப்பு இல்லை. எனவே எனக்கு இந்த பங்கு பிடிக்கும் என்று எந்த ஒரு பங்கையும் காதல் கொள்ளாதீர்கள்.

"அடுத்த நாள் வர்த்தகத்திற்கு தினமும் பங்குகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்". தினமும் சந்தை முடிந்ததும் அடுத்தநாள் எந்தெந்த பங்குகளை வர்த்தகம் செய்யலாம் என்பதை முடிவு செய்து கொள்ள வேண்டும். நம்மிடம் இருக்கும் பங்குகளில் எதை விற்கலாம், விற்ற பணத்தில் வேறு எந்த பங்குகளை வாங்கலாம் என்பதை Select செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சந்தை நடக்கும் போது திடீரென்று நான் இந்த பங்கை வாங்கபோகிறேன் என்று முடிவு எடுப்பது அனேகமாக சரியாக இருப்பதில்லை. எப்படி தேர்ந்தெடுப்பது என்பது வரும் பதிவுகளில் பாப்போம்.

"அடுத்தவர்களின் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக செயல்படுத்த வேண்டாம்". பங்கு பரிந்துரை செய்வதற்கென்றே நிறைய வலைத்தளங்கள் இருக்கிறது. மாதம் இவ்வளவு பணம் காட்டுங்கள் நாங்கள் பரிந்துரை செய்கிறோம் என்று நிறைய தளங்கள் சொல்கின்றன. பரிந்துரைகளை கண்மூடித்தனமாக Follow பண்ணுவது என்பது கிட்டத்தட்ட தற்கொலைக்கு சமம். அடுத்தவர்கள் சொல்லும் பரிந்துரைகளை கவனத்தில் கொள்ளுங்கள், அதை அப்படியே செயல்படுத்தாமல் நீங்கள் அந்த பங்கின் Chart -ஐ பார்த்து நீங்களே முடிவு செய்து வர்த்தகம் செய்யுங்கள். லாபமோ நஷ்டமோ உங்களது செயல்பாட்டுக்கு நீங்களே பொறுப்பு என்ற மனப்பான்மையை முதலில் இருந்தே வளர்த்துக்கொள்ளுங்கள். நஷ்டமடைந்தால் அடுத்தவர் மீது பழி போடுவதில் எந்த பயனும் இல்லை, ஏனென்றால் பணம் உங்களுடையது, அதை பாதுக்காக்க வேண்டியதும், பன்மடங்காக பெருக்க வேண்டியதும் உங்களது பொறுப்பு. அடுத்தவரை குறை கூறினால் நாம் இழந்த பணம் திரும்ப வரப்போகிறதா???

"லாபத்தை போல் நஷ்டத்தையும் ஏற்க பழகிக்கொள்ளுங்கள்". வர்த்தகத்தில் லாபம் நஷ்டம் என்பது இல்லை, Winning Trade அல்லது Losing Trade என்ற இரண்டு மட்டும் தான் உண்டு. வெற்றி தோல்வி மட்டுமே குறிக்கோள். நாம் நிர்ணயித்த லாபம் வந்தால் அது வெற்றி, ஒரு வேளை நாம் நினைத்த மாதிரி பங்கின் விலை கூடாமல், இறங்க ஆரம்பித்தால் ஒரு குறிப்பிட்ட அளவு நஷ்டத்தில் விற்றுவிடுவது நல்லது. இதை Stop Loss என்று சொல்கிறோம். பங்கின் விலை ஏறும் என்று நினைத்து மேலும் மேலும் விலை இறங்கும் போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதை விட, இறங்குகிறது என்று தெரிந்ததும், விற்று கொஞ்சம் நஷ்டத்தை ஏற்றுக்கொள்ளலாம். இதனால் இரண்டு வித பலன் உண்டு. முதலில் அதிக நஷ்டத்தை தவிர்த்துவிடலாம், இன்னொன்று விற்று வந்த பணத்தை வைத்து அடுத்த பங்கை வாங்கி இழந்த லாபத்தை சரி கட்டி விடலாம். எனவே ஸ்டாப் லாஸ் என்பது அத்தியாவசியமானது.

ஒரு பங்கை வாங்க வேண்டும் என்று முடிவுசெய்து விட்டால், உங்களுக்கு முழுமையான நம்பிக்கை இருந்தால் மட்டுமே அதை வாங்க வேண்டும். உங்களுடைய Analysis -இல் உங்களுக்கு முழு திருப்தி இல்லை என்றால், அந்த பங்கை வாங்காமல் வேறு பங்குகளை கவனியுங்கள்.

நீங்கள் செய்யும் வர்த்தகத்தை தினமும் குறித்து வைத்துக்கொள்ளுங்கள் (Record Keeping). இது ஏனென்றால், நேரம் கிடைக்கும்போது நாம் ஏற்கனவே செய்த வர்த்தகங்களை ஒரு Review செய்து பார்ப்பது நல்லது. அப்படி பார்க்கும் போது, நாம் லாபம் சம்பாதித்த பங்குகளுக்கும் நஷ்டமடைந்த பங்குகளுக்கும் Technical Indicators -இல் என்னென்ன வித்தியாசம் இருந்தது, நாம் எங்கே தவறு செய்தோம் போன்றவை நமக்கு புரியும். இது மிகமிக அத்தியாவசியமானது. எனவே, உங்களுடைய வர்த்தகத்திற்கான Record உங்களிடம் இருக்கவேண்டும். ரொம்ப எளிதான விஷயம் இது. பங்கு வாங்கிய மற்றும் விற்ற தேதி, பங்குகளின் எண்ணிக்கை, வாங்கியவிலை, விற்றவிலை, Brokers Commission , லாப-நஷ்டம் போன்ற விஷயங்களை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

திட்டமிடுதலில் கடைசியாக கவனிக்க வேண்டியது, பண நிர்வாகம் (Money Management). இதில் நாம் கவனிக்க வேண்டிய முதல் விஷயம் ஸ்டாப் லாஸ். அதிக நஷ்டத்தை தவிர்பதற்காக பங்கின் விலை குறைகிறது என்று தெரிந்ததும், ஒரு குறிப்பிட்ட நஷ்டத்தில் பங்கை விற்று, அதிக நஷ்டத்தை தவிர்ப்பது - இது பற்றி ஏற்கனவே பதுவிட்டோம். Stop Loss -ஐ அடுத்து நாம் கவனிக்க வேண்டியது, சில நேரம் நாம் வாங்கிய பங்கு, விலை கூடவும் செய்யாமல், குறையவும் செய்யாமல் ஒருவித Flat -ஆக இருக்கும். இதை ஆங்கிலத்தில் Empty Zone என்று சொல்லுவார்கள். இந்த மாதிரி எம்ப்டி ஜோன்-இல் இருக்கும் ஒரு பங்கை நாம் விற்றால் லாபமும் இருக்காது அதே நேரம் அதிக நஷ்டமும் இருக்காது. அதாவது பங்கின் விலை நம்முடைய லாப இலக்கிற்கும் வரவில்லை, Stop Loss அளவையும் தொடவில்லை. இந்த மாதிரி Empty Zone (EZ ) -இல் இருக்கும் பங்கு சந்தையின் போக்கை அடுத்து, திடீரென விலை கூடலாம் அல்லது விலை வேகமாக குறையவும் செய்யலாம். அதனால் EZ -இல் இருக்கும் பங்கை முடிந்தவரை விற்று நம்முடைய முதலை கையில் எடுத்துவிடுவது நல்லது. கீழே இருக்கும் chart-ஐ பாருங்கள், இது Jaiprakash Hydropower பங்கின் தற்போதைய Chart. கண்டிப்பாக இது EZ -இல் இருக்கிறது. இந்த பங்கு Rs .76 /-ஐ தாண்டினால் வாங்கலாம் அல்லது Rs .72 /-ஐ விட குறைந்தால் Down Trend என்று முடிவு செய்யலாம், அதுவரை இந்த பங்கில் வர்த்தகம் என்பது கவனமாக இருக்க வேண்டும். EZ -ஐ ஒரு பங்கு நல்ல Volume (தினம் வர்த்தகமாகும் பங்குகளின் எண்ணிக்கை) உடன் தாண்டினால், பங்கின் விலை கூடும், EZ -ஐ தாண்டுகிறது என்று அர்த்தம், அபப்டி இல்லாமல் வழக்கமான Volume இருந்தால், பங்கின் விலை கூடும் என்று சொல்ல முடியாது, மீண்டும் EZ -இல் இருக்க வாயப்பு உண்டு. (கீழே இருக்கும் chart -இன் கீழ்பகுதியில் இருக்கும் Histogram தான் தினசரி Volume). Empty Zone-இல் ஒரு பங்கின் விலை எப்படி இருக்கிறது என்பதை கீழே இருக்கும் Chart -இல் பார்க்கலாம்.




ஏற்கனவே பார்த்தது போல் EZ-இல் ஒரு பங்கு நமக்கு அதிக லாபமும் தராது, அதிக நஷ்டமும் தராது, இந்த சூழ்நிலையில், அந்த பங்கை விற்றுவிட்டு, அடுத்த பங்கை பார்ப்பது நல்லது. இனி பங்கின் விலைக்கும் Volume -கும் என்ன தொடர்பு, அது எப்படி ஒரு பங்கை வாங்குவது அலல்து விற்பதற்கு பயன்படும் என்பதை அடுத்த பதிவில் பாப்போம்.

Thursday, September 24, 2009

பங்கு வர்த்தகம் : Swing Trading - அறிமுகமும் வழிமுறைகளும் (பாகம் 2)

PLAN A TRADE, TRADE THE PLAN


சென்ற பதிவில் Swing Trading என்றால் என்ன என்று பார்த்தோம். இந்த பதிவில் வர்த்தக திட்டம் பற்றி பார்ப்போம். ஏனென்றால் திட்டத்துடன் செயல் படும் மனிதனை விட திட்டமில்லாமல் செயல்படும் மனிதனின் தவறுகள் அதிகமாக இருக்கும் (இது பங்கு வர்த்தகத்திற்கு மட்டுமல்ல அனைத்திற்கும் பொருந்தும்). திட்டமிடுதல் மட்டும் முக்கியமல்ல அந்த திட்டத்தின் படி கொஞ்சமும் தவறாமல் நடக்க வேண்டும். பங்கு வர்த்தகத்தில் ஒரு Famous Quote உண்டு. plan a Trade , Trade the plan . எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்து கொள்ளுங்கள், அப்புறம் அந்த முடிவுப்படியே வர்த்தகம் செய்ய வேண்டும் - அதிலிருந்து கொஞ்சமும் விலகக்கூடாது.அந்த அளவு மன உறுதியை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். இனி திட்டமிடுதல் பற்றி பாப்போம். நன்றாக கவனத்தில் கொள்ளுங்கள் வர்த்தகம் செய்வதற்கான பதிவில் நாம் இருக்கிறோம். வர்த்தகம் என்றால் ஒரு பங்கை வாங்கி 3 முதல் 5 நாட்களில் விற்பதற்கான வர்த்தக திட்டம். சில நேரங்களில் ஒரு நாளில் கூட விற்றுவிடும் சூழ்நிலை வரலாம். இந்த மிகமிக குறுகியகால வர்த்தகத்தை தான் Swing Trading என்கிறோம். அதனால் Swing Trading இல் Timing ரொம்ப முக்கியம். இதற்கு நாம் Trading Rules வரையறுத்துக்கொள்வது தவிர்க்க முடியாதது. கீழ்க்கண்ட Trading Rules or Plan, Swing Trading -கு அவசியம்.

1. லாப இலக்கு (Targeted Profit)
2. சொந்த பணத்தில் தான் வர்த்தகம் செய்ய வேண்டும்
3. குறைந்த அளவு பணத்தில் வர்த்தகத்தை ஆரம்பிக்க வேண்டும்
4. பங்கை வர்த்தகம் செய்யுங்கள் - காதல் கொள்ளாதீர்கள்
5. அடுத்த நாள் வர்த்தகத்துக்கு தினமும் பங்குகளை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள்(Watchlist)
6. அடுத்தவர்களின் பரிந்துரைகளை கண்மூடித்தனமாக செயல்படுத்த வேண்டாம்
7. வர்த்தகத்துக்கு இடையே அவசர முடிவுகள் வேண்டாம்
8. லாபத்தை போல் நஷ்டத்தையும் ஏற்க பழகிக்கொள்ளுங்கள் (Stop Loss)
9. உறுதியான நம்பிக்கை இல்லை என்றால் வாங்காதீர்கள்
10.நீங்கள் செய்த வர்த்தகத்தை தினமும் குறித்துக்கொள்ளுங்கள் (Record Keeping)
11.நம்முடைய பணத்தை எப்படி நிர்வகிப்பது? (Managing your money)

இனி ஒவ்வொன்றாக கவனிப்போம்.

லாப இலக்கு (Targeted Profit)

பொதுவாக பங்குகளை வாங்கியவர்கள் சொல்லும் ஒரு வார்த்தை - நான் வாங்கிய பின் இந்த பங்கு 10% லாபத்தில் இருந்தது, ப்ச் விற்காமல் விடுட்டுட்டேன், இப்போ 20% நஷ்டத்தில் இருக்கிறது என்பார்கள். இதற்கு என்ன காரணம்? இதே மாதிரி அனுபவங்கள் எனக்கும் நிறைய இருந்திருக்கிறது. அன்று விற்றிருக்கலாமே என்று இன்று நினைத்தால் ஆகப்போவது ஒன்றுமில்லை. அதனால் நம்முடைய லாபத்திற்கு நாம் ஒரு இலக்கு நிர்ணயித்துக்கொள்ள வேண்டும். நாம் வாங்கிய பங்கு, நம்முடைய நிர்ணயிக்கப்பட்ட லாப இலக்கை அடைந்ததும் விற்றுவிட வேண்டும். இந்த பங்கு இன்னும் விலை கூடும் கூடும் என்று நினைத்து, விற்காமல் வைத்திருக்க கூடாது. ஒரு வேளை நாம் வைத்திருக்கும் பங்கு இன்னும் விலை கூடும் என்று நாம் உறுதியாக நம்பினால், பாதி பங்குகளை நம்முடைய இலக்கில் விற்று விட்டு, மீதி இருப்பவற்றை அதிக லாபத்திற்காக வைத்திருக்கலாம். சில நேரம் நாம் விற்ற பங்குகள் விலை கூடலாம், அதற்காக வருத்தப்பட கூடாது. அதே பங்கு நாம் விற்றபின் விலை குறைந்தால் நாம் சந்தோஷ பாடுவோமே, அதைப்போல் விற்றபின் விலை கூடி விட்டதே என்று வருத்தப்பட கூடாது. நமக்கு நம்முடைய லாபம் வந்து விட்டது. போதும் என்று மன நிறைவாக அடுத்த வர்த்தகத்தை கவனிக்க வேண்டும்.

என் நண்பர் ஒருவர் வர்த்தகத்தில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். அவரிடம் கேட்டேன், எப்படி லாபத்தை புக் பண்ணுகிறீர்கள் என்று. அதெல்லாம் பெரிய விஷயம் இல்லை, ஒரு பங்குக்கு ஐமபது ரூபாய் லாபம் வந்ததும் விற்று விடுவேன் என்றார். அவர் வாங்கும் பங்குகள் அனேகமாக அதிக விலை உள்ள பங்குகளாக இருக்கும், அவர் வர்த்தகத்திற்கு ஒதுக்கி இருக்கும் பணமும் அதிகம். அதனால் ஐமபது ருபாய் என்றால் ஒரு வர்த்தகத்தில் 5000 முதல் 10000 ரூபாய் வரை லாபம் பார்ப்பார். ஆக அவருக்கு ஒரு இலக்கு - ஐமபது ரூபாய் கூடினால் போதும் என்பது - அந்த ஐம்பது ருபாய் லாபம் ஒரு நாளில் வரலாம் அல்லது ஒரு வாரம் ஆகலாம். இப்படி ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் ஒரு இலக்கு வைத்திருப்பார்கள். லாபத்தை ரூபாயில் நிர்ணயிப்பதை விட, சதவீதத்தில் நிர்ணயித்துக்கொள்ளலாம்.

நாம் Swing Trading செய்யும் போது, குறைந்த பட்ச லாபமாக ஒரு நாளைக்கு 2% அல்லது வாரத்திற்கு 5 முதல் 10 சதவீத லாபம் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு 2% என்று இலக்கு நிர்ணயித்து கொண்டபின், சில நேரம் ஒரே நாளில் 5% கூடலாம், அல்லது நாம் 2% லாபத்தில் விற்ற பங்கு அடுத்த நாள் மேலும் 2% கூடலாம். ஒரு பங்கை விற்றுவிட்ட பிறகு, அது கூடுகிறதே என்று கவலைப்படுவதை விட, விற்று வந்த பணத்தில் விற்ற அன்றே அடுத்த பங்கில் முதலீடு செய்து விட வேண்டும். சில நேரங்களில் வாங்கிய அன்றே 2% லாபம் கிடைத்து விடும், விற்று விட்டு அடுத்த பங்கை வாங்குவது நல்லது அல்லது பாதியை விற்றுவிட்டு, மீதியை அடுத்த நாளுக்கு வைத்துக்கொள்ளலாம். சில பங்குகள் நாம் விற்ற பின் கூடிக்கொண்டிருந்தால், அந்த பங்கு இன்னும் கூடும் என்று நாம் உறுதியாக நம்பினால், அதே பங்கை மீண்டும் வாங்கி விற்பதில் தவறு இல்லை. வாங்குவதற்கு முன், விலை உயர்வதை எப்படி தெரிந்து கொள்ளலாம் என்று நீங்கள் யோசிப்பது புரிகிறது. அதை தெரிந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்களை நாம் பார்க்க வேண்டும், தொடர்ந்து பதிவை பாருங்கள்.

ஒவ்வொருவரும் ஒரே பங்கில் நான் 50% லாபம் பார்த்தேன் என்று சொல்கிறார்களே, இங்கே நாம் 2% பற்றி பேசுகிறோமே, இதெல்லாம் ஒரு லாபமா என்ற எண்ணம் சிலருக்கு வரலாம். பலதுளி பெருவெள்ளம் என்பது போல் ஒரு நாளைக்கு 2% என்றால், சராசரியாக ஒரு மாதத்திற்கு இருபது நாட்கள் பங்குச்சந்தை உண்டு. திட்டமிட்டபடியே லாபமீட்ட முடிந்தால் மாதத்திற்கு 40% லாபம் கிடைக்கும். நாம் செய்யும் அத்தனை வர்த்தகமும் லாபத்தில் முடியும் என்று சொல்ல முடியாது. சில பங்குகளை ஒரு சதவீத லாபத்தில் விற்க வேண்டியிருக்கலாம், சில பங்குகளில் ஒரே நாளில் 5% லாபம் கிடைக்கலாம், சில பங்குகளை நஷ்டத்தில் விற்க வேண்டியிருக்கலாம். அதனால் சராசரியாக பத்து வர்த்தகத்தில், ஏழு லாபத்தில் முடிந்தால் கூட, மாதத்தில் 20 நாட்கள் பங்குச்சந்தை உண்டு என்பதால், சராசரியாக மாதத்திற்கு 20% முதல் 25% லாபம் கிடைக்கும். மாதத்திற்கு 20% என்பது மிகப்பெரிய லாபம். நம்புங்கள் மாதத்திற்கு 20% என்பது என்னுடைய மிக குறைந்த மதிப்பீடு.

அதனால் திட்டமிடுதலில் முதல் விஷயமாக லாப இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். இந்த லாப இலக்கு என்பது Swing Trading -இல் மட்டுமில்லாமல் அனைத்து வர்த்தகத்திலும் அவசியமானது. மற்ற விஷயங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.
Page copy protected against web site content infringement by Copyscape