You will make it....

You will make it....

Friday, April 24, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 11

சென்ற பதிவில் Promoters Holding பற்றி பார்த்தோம். ஒரு நிறுவனத்தில் Promoters என்று சொல்லப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தவர்கள் ஓரளவு பங்குகளை வைத்திருப்பார்கள். மீதமுள்ள பங்குகளை வெளியாட்கள் - அதாவது Promoters அல்லாதவர்கள் - வைத்திருப்பார்கள். குறிப்பாக Mutual Funds, FII (Foreign Institutional Investors) என்று சொல்லப்படும் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள், பிற நிறுவன முதலீட்டாளர்கள் மற்றும் Individual Investors என்று சொல்லப்படும் தனிநபர் முதலீட்டாளர்கள் போன்றவர்களும் நிறுவனத்தில் பங்குகளை வைத்திருப்பார்கள். பொதுவாக ஒரு நிறுவனத்தில் Promoters Holding குறையாமல் இருப்பது நல்லது. நாம் ஏற்கனவே சொன்னது போல் சில நிறுவனங்களில் Promoters அவர்களுடைய பங்கை கூட்டிக்கொண்டு இருப்பார்கள். அப்படி இருந்தால் ரொம்ப நல்லது. ஆனால்
Promoters Holding குறையாமல் இருக்க வேண்டும் என்பது அடிப்படையான விஷயம்.

Promoters அல்லாமல் மற்றவர்களில் குறிப்பாக கவனிக்க வேண்டியது FII மற்றும் Mutual Funds வைத்திருக்கும் பங்குகள். ஏன் இதை கவனிக்க வேண்டும் என்றால், ஒரு நிறுவன பங்கை வாங்கும் முன் நாம் ஏற்கனவே கூறியதுபோல் லாப நஷ்ட கணக்கு மற்றும் நிதிநிலை அறிக்கை பற்றி எல்லாம் நிறைய அலசி பார்க்க வேண்டும். மேலும் இவை எல்லாம் கடந்த காலத்தில் அந்த நிறுவனம் எப்படி நடந்திருக்கிறது என்பதை சொல்லுமே ஒழிய, எதிர்காலத்தில் அது நிறுவனம் எப்படி செயல்படும் என்பதை பற்றி சொல்வது அல்ல. ஆனால் Directors Report என்று சொல்லப்படும் நிறுவனத்தின் இயக்குனர்கள் (Directors) கொடுக்கும் அறிக்கை ஒவ்வொரு வருட நிதிநிலை அறிக்கையுடன் இணைக்கப்பட்டிருக்கும். அதில் நிறுவனம் கடந்த ஆண்டு என்னவெல்லாம் சாதித்தது, என்னென்ன தடைகளை தாண்டி வந்தது, மேலும் எதிர்காலத்தில் நிறுவனத்தின் திட்டங்கள் என்ன, அதை அடைய என்னென்ன வழிமுறைகள் போன்றவை பற்றி சொல்லப்பட்டிருக்கும். இவ்வற்றை எல்லாம் தெரிந்து கொண்டு அதன் பிறகு முதலீடு செய்வது நல்லது. ஆனால் நமக்கு இருக்கும் குறைந்தபட்ச நேரத்தில் இவ்வளவு தூரம் நம்மால் கவனிக்க முடியுமா? அல்லது அதில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்கள் எல்லாம் எவ்வளவு தூரம் சாத்தியமானது என்பதை பற்றி ஒரு முடிவுக்கு வருவது ஒரு தனிப்பட்ட நபருக்கு கொஞ்சம் கஷ்டமான காரியமாக இருக்கலாம்.

உதாரணமாக ஆண்டுக்கு ஒரு கோடி ருபாய் விற்பனை செய்யும் ஒரு நிறுவனம் அடுத்த ஆண்டு விற்பனை இலக்கு நூறு கூடி என்று Directors Report-இல் சொல்லி இருக்கலாம். ஒரு கோடி ருபாய் விற்பனை செய்யும் நிறுவனம் நூறு கோடியை ஒரு ஆண்டில் எட்டுவது சாத்தியமில்லை என்று நாம் அந்த விஷயத்தை நம்பாமல் அந்த நிறுவன பங்கில் முதலீடு செய்யாமல் விட்டு விடலாம். ஆனால் ஒரு வேளை அந்த நிறுவனம் தன்னுடைய பொருளை விற்பனை செய்ய ஏதாவது ஒப்பந்தம் செய்திருக்கலாம் அல்லது வெளி நாட்டில் ஒரு கிளை ஆரம்பிக்கலாம், இப்படி இன்னும் எத்தனையோ விஷயங்கள் நமக்கு தெரியாமல் இருக்கலாம். இந்த மாதிரி விஷயங்களை ஒரு சிறிய முதலீட்டாளர் தெரிந்து கொள்வது அவ்வளவு எளிதல்ல அலல்து சாத்தியாமில்லாமல் கூட இருக்கலாம். இப்படி விஷயங்கள் தெரியாமல் இருந்து அதனால் ஒரு நிறுவத்தில் முதலீடு செய்யாமல் இருந்தோமென்றால், ஒரு நல்ல வாய்ப்பை தவற விடுகிறோம் என்று அர்த்தம். ஆனால் Mutual Fund மற்றும் FII போன்றவர்கள் அதற்கென்றே ஒரு குழு அமைத்து நிறுவனத்தை பற்றி துல்லியமாக ஆராய்ச்சி செய்து அதன் பிறகே முதலீடு செய்வார்கள். ஒரு சிறு முதலீட்டாளர் தெரிந்து கொள்ள முடியாத விஷயங்களை எல்லாம் அவர்களால் தெரிந்து கொள்ள முடியும். அப்படி அனைத்தும் தெரிந்துகொள்ள வாய்ப்புள்ளவர்கள் ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்கிறார்கள் என்றால், நிச்சயமாக அவர்கள் முதலீடு செய்த நிறுவனம் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்கும் என்று சொல்லலாம்.

அதனால்தான் ஒரு நிறுவனத்தில் Promoters அல்லாமல் பிற நிறுவனங்கள் எவ்வளவு பங்கு வைத்திருக்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டும். ஒவ்வொரு காலாண்டு நிதிநிலை அறிக்கை சமர்ப்பிக்கும் போதும் அதனுடன் Shareholding Pattern என்று சொல்லப்படும், பங்குகளை யார் யார் வைத்திருக்கிறார்கள் என்ற விபரத்தையும் நிறுவனங்கள் பங்குச்சந்தையில் சமர்பிக்க வேண்டும். அந்த விபரத்தை நாம் BSE அல்லது NSE வலைத்தளத்தில் பார்த்துக்கொள்ளலாம். கீழே இணைத்திருப்பது BSE வலைத்தளத்தில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் Shareholding Pattern. (Click the picture to enlarge)



பங்குகள் பற்றிய எந்த ஒரு வலைத்தளத்திலும் நிறுவனத்தின் பங்குகள் பற்றிய விபரங்களை நாம் பார்க்கும் போது இந்த நிறுவனத்தில் Mutual Funds பங்குகளை வைத்திருக்கிறதா என்பதை பார்க்க ஒரு சுட்டி வைக்கப்பட்டிருக்கும். இதன் அடிப்படை நோக்கமே நிறுவனத்தை பற்றி நாம் இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான். அதனால் நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்க வேண்டும் என்று முடிவு செய்தால் Shareholding Pattern-ஐ கவனத்தில் கொள்வது அவசியம்.

மேலும் நாம் ஒரு நிறுவனத்தில் நீண்டகால அடிப்படையில் பங்குகளை வாங்கியபின், அந்த நிறுவனத்தின் ஒவ்வொரு காலாண்டு முடிவுகளையும் கவனிக்க வேண்டும். அப்படி கவனிக்கும்போது Promoters, Mutual Funds மற்றும் FII முதலீட்டில் இருக்கும் மாற்றத்தை கவனிக்க வேண்டும். ஒருவேளை இவர்களில் யாராவது முதலீட்டை குறைக்க ஆரம்பித்தார்கள் என்றால் முதலீட்டாளர்கள் கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். எதற்காக குறைக்கிறார்கள் என்பது நமக்கு சொல்லப்படாவிட்டாலும், நாம் அதற்கான காரணத்தை அறிய முற்பட்டால் நல்லது. ஒருவர் ஒரு நிறுவனத்தில் நீண்டகால அடிப்படையில் முதலீடுசெய்துவிட்டு அப்புறம் முதலீட்டின் அளவை குறைக்கிறார் என்றால் என்னென்ன காரணங்கள் இருக்க முடியும்? ஒருவேளை நிறுவனத்தின் செயல்பாடு சரி இல்லாமல் இருந்து, அதனால் எதிர்காலத்தில் இந்த முதலீடு நல்ல வருமானம் தராது என்ற ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இந்த நிறுவனத்தில் கிடைக்கும் லாபத்தை விட அதிக லாபம் தரும் வேறு நிறுவனத்தில் முதலீடு செய்ய இந்த முதலீட்டை குறைத்திருக்கலாம் அல்லது இதில் எதுவுமே காரணம் இல்லாமல் முதலீடு செய்தவரின் தனிப்பட்ட விஷயங்களுக்கு பணம் தேவை என்பதால் முதலீட்டை குறைத்திருக்கலாம். இதில் கடைசி காரணத்திற்காக - அதாவது தனிப்பட்ட தேவைகளுக்காக ஒருவர் முதலீட்டை குறிக்கிறார் என்றால் அதில் மற்ற முதலீட்டாளர்கள் யோசிக்க ஒன்றுமே இல்லை. ஆனால் முதல் இரண்டு காரணங்களுக்காக ஒருவர் முதலீட்டை குறைக்கிறார் என்றால் பிற முதலீட்டாளர்கள் யோசிக்கக் வேண்டும். இந்த நிறுவனத்தில் எதிர்கால லாபம் குறைகிறது என்று Mutual Funds அல்லது FII முடிவு செய்கிறார்கள் என்றால் நிச்சயம் நாம் அதை பின்பற்றியே ஆக வேண்டும். ஒரு நிறுவனத்தில் பங்குகளை வாங்கும் முன் எப்படி Mutual Fund மற்றும் FII-ஐ பின்பற்றினோமோ அதேபோல் அவர்கள் முதலீட்டை குறைக்கிறார்கள் என்றால் அதையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நமக்கு தெரியாத அல்லது நம் கவனத்திற்கு வராத விஷயங்கள் அவர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் நாம் ஏற்கனவே எழுதியது போல், முதலீடு செய்துவிட்டு, Mutual Funds மற்றும் FII தாங்கள் முதலீடு செய்த நிறுவனத்தின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனிப்பார்கள். அவர்கள் செய்யும் முதலீட்டின் அளவு பெரிது என்பதால் அவர்களின் கவனமும் அதிகமாக இருக்கும். அதனால் நிறுவனங்கள் எவ்வளவு பங்குகளை வைத்திருக்கிறது, Promoters, Mutual Funds மற்றும் FII வைத்திருக்கும் பங்குகளின் அளவில் சென்ற காலாண்டை விட இந்த காலாண்டில் என்ன மாற்றம் என்பதை எல்லாம் கவனித்து முதலீட்டு முடிவுகளை எடுப்பது நல்லது.

இந்த பதிவில் இருக்கும் விஷயங்களை படித்தபின், இனிமேல் Mutual Funds அல்லது FII முதலீடு செய்யாத நிறுவனத்தில் நான் முதலீடு செய்யமாட்டேன் என்று முடிவு செய்துவிடக் கூடாது. நாம் ஒரு நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கு, நிதிநிலை அறிக்கை மற்றும் அந்த நிறுவனம் சார்ந்திருக்கும் துறை பற்றியெல்லாம் அலசி பார்த்து அந்த பங்குகளை வாங்கலாம் என்று முடிவு செய்திருப்பின், அந்த நிறுவனத்தில் Mutual Funds அல்லது FII போன்றோர்களும் முதலீடு செய்திருந்தால் அந்த நிறுவனங்களில் நாம் தைரியமாக முதலீடு செய்யலாம் என்றுதான் சொல்கிறேனே ஒழிய, அவர்கள் முதலீடு செய்யாத நிறுவனங்கள் எல்லாம் நல்ல நிறுவனங்கள் அல்ல என்று சொல்லவில்லை. நம் நாட்டில் எத்தனையோ நிறுவனங்கள் இருக்கிறது, அவற்றில் எல்லாம் அவர்கள் முதலீடு செய்தால் தான் அவை நல்ல நிறுவனம் என்று நினைத்தோமேன்றால் அது தவறு. பங்குகளில் செய்யும் முதலீடு என்பது குறிபிட்ட ஒரே ஒரு விஷயத்தை மட்டும் வைத்து முடிவு செய்யப்படுவதில்லை. இன்னும் கவனிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது, அவற்றை வரும் பதிவுகளில் பார்க்கலாம்.

இதுவரை நாம் கூறியிருக்கும் விஷயங்கள் அனைத்தும் முதலீட்டாளர்களுக்கு - அதாவது Long-term மற்றும் Medium-term முதலீட்டாளர்களுக்கு. ஏனென்றால் வர்த்தகம் செய்கிறவர்கள் இந்த விஷயங்களை எல்லாம் இவ்வளவு துல்லியமாக பார்ப்பதில்லை. பங்கு வர்த்தகர்களின் ஒரே குறிக்கோள் விலை குறையும் போது வாங்கவேண்டும், கூடும் போது விற்க வேண்டும் என்பது மட்டுமே. பங்கு வர்த்தகத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் வேறு, முதலீட்டில் எடுக்க வேண்டிய முடிவுகள் வேறு. இந்த இரண்டையும் பிரித்துப்பார்க்க பழகிவிட்டோமென்றால் பங்குச்சந்தை முதலீடு அல்லது பங்குச்சந்தை வர்த்தகம் என்பது எளிதாக இருக்கும். அடுத்து வரும் பதிவுகளில் முதலீட்டுக்கு முன் கவனிக்க வேண்டிய இன்னும் சில விஷயங்களை பார்ப்போம்

Saturday, April 18, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 10

Promotor என்பவர் ஒரு தொழிலை ஆரம்பிக்க வேண்டும் என்று முடிவு செய்து அதற்கான ஆயத்த வேலைகள் அனைத்தையும் செய்து, ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பார். அப்படி ஆரம்பிக்கும் போது, அது தனி நபர் நடத்தும் Proprietorship ஆக இருக்க வேண்டுமா, அல்லது இன்னும் ஓன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்களை சேர்த்து Partnership ஆக ஆரம்பிக்கலாமா அல்லது நிறுவனத்தை ஒரு Limited Company ஆக ஆரம்பிக்கலாமா என்று முடிவு செய்து, அதற்கேற்றாற்போல் தன்னுடைய முதலீட்டுக்கான பங்கை செலுத்தி தொழிலை ஆரம்பிப்பார். பொதுவாக ஒரு நிறுவனத்தில் 50%-க்கு அதிகமாக பங்கு இருந்தால் அப்படி பங்கு வைத்திருப்பவர்கள் நிறுவனத்தில் ஆதிக்கம் செலுத்த முடியும் (Majority Shareholding), அந்நிறுவனத்தை தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியும். தன்னுடைய திறமை, நேரம், உழைப்பு அனைத்தையும் பயன்படுத்தி ஒரு நிறுவனத்தை ஆரம்பிப்பவர், அது தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புவது இயற்கையே. அப்படி அதித பங்குகளை ஒருவரோ அல்லது ஒரு குடும்பமோ வைத்திருந்து, நிறுவனத்தின் முழு கட்டுப்பாட்டையும் தன்னிடமே வைத்திருந்தால் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்யும் நம் பணத்துக்கு என்ன உத்திரவாதம் என்று நமக்கு ஒரு சிறிய சந்தேகம் வரலாம். அப்படி நிறுவனத்தை முழு கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், பங்கு வெளியிட்டு, பொதுமக்களின் பணத்தை முதலீடாக பெற்று நிறுவனத்தை நடத்தும்போது Promotor தன்னிச்சையாக முடிவுகளை எடுத்து விட முடியாது. வருடா வருடம் பங்குதாரர்களின் கூட்டத்திற்கு - Annual General Meeting (AGM) - ஏற்பாடு செய்ய வேண்டும். அதில் தான் முக்கியமான முடிவுகளை எடுக்க முடியும். இப்படி ஒருவரோ அல்லது ஒரு குடும்பத்தினரோ அதிகபட்ச பங்குகளை வைத்திருக்கும் போது அவர்களை தவிர நிறுவனத்தில் முதலீடு செய்த மற்றவர்களை Minority Shareholders என்று சொல்கிறோம். இந்த Minority Shareholders-இன் உரிமையை பாதுகாக்க இந்திய நிறுவன சட்டத்தில் இடமிருக்கின்றது(Companies Act 1956). ஆக, ஒரு Promotor என்பவர்தான் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்.

அப்படி ஆரம்பித்த Promotor, நாளடைவில் மெதுவாக நிறுவனத்தில் இருக்கும் தன்னுடைய பங்குகளை குறைக்கிறார் என்றால் என்ன அர்த்தம்? அவருக்கு அந்த நிறுவனத்தில் அதிக நம்பிக்கை இல்லை. நிறுவனத்தில் நடக்கும் விஷயங்கள் அனைத்தும் அவருக்கு தெரிந்திருக்கும் என்பதால், இந்த நிறுவனத்திற்கு நல்ல எதிர்காலம் இல்லை என்பது அவருக்கு தெரிந்ததும், மெதுவாக தன்னுடைய பங்குகளை வெளியே விற்க ஆரம்பிப்பார். ஆனால் ஒவ்வொரு காலாண்டிலும், பங்கு சந்தையில் நிறுவனத்தின் நிதி அறிக்கைகளை தாக்கல் செய்தும் போது, Promoters எவ்வளவு பங்குகள் வைத்திருக்கிறார்கள் என்ற தகவலையும் சேர்த்தே கொடுக்க வேண்டும். இப்படி தகவலை கொடுக்கும் போது, Promoters பங்குகளை விற்றதை முதலீட்டாளர்கள் இதை தெரிந்து கொண்டால், நிறுவனத்தின் நம்பகத்தன்மை போய்விடுமே என்று பயந்து, அனேக Promoters பங்குகளை விற்பதை விட எளிதாக, வெளியே தெரியாமல் அடகு வைப்பதை வழக்கமாக்கி கொண்டார்கள் - நம்மிடம் இருக்கும் தங்கத்தை வங்கியில் அடகு வைத்து நம்முடைய தேவைக்கு பணத்தை கடனாக பெறுவது மாதிரிதான் இதுவும்!!!. ஏனென்றால், பங்குசந்தையை பொறுத்த வரை Promoters பங்குகளை விற்றால் மட்டுமே பங்குசந்தைக்கு தகவல் கொடுக்க வேண்டும் - அடகு வைத்தால் பங்கு சந்தைக்கு தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்னும் நிலை இருந்ததால், Promoters பங்குகளை அடகு வைப்பதை வழக்கமாக வைத்திருந்திருக்கிறார்கள்.

அனுபவம் தான் ஆசான் என்று சொல்வதைப்போல, சத்யம் கம்ப்யுட்டர் நிறுவனத்தில் பிரச்னை வந்த பிறகுதான் செபி அமைப்பு (SEBI - Security and Exchange Board of India), பங்குகளை அடகு வைத்தாலும், பங்குசந்தைக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஒரு விதியை நடைமுறைப்படுத்தியது. அப்படி விதிமுறை அமல் படுத்திய பிறகும் நம்முடைய Promoters தாங்கள் பங்குகளை அடகு வைத்த விபரத்தை உடனே சந்தைக்கு தெரிவித்து விடவில்லை. தகவல் தராத நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் அபராதம் விதிக்கப் போகிறேன் என்று செபி மிரட்டிய பிறகுதான் Promoters தாங்கள் அடகு வைத்த பங்குகளின் விபரத்தை சந்தைக்கு தெரிவித்தார்கள். இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சில Promoters தங்களுடைய அனைத்து பங்குகளையும் அடகு வைத்து விட்டார்கள் என்பது இந்த விதி அமலுக்கு வந்த பிறகுதான் முதலீட்டார்களுக்கே தெரிந்தது.

சரி இதெல்லாம் நடைமுறை விஷயம், இதில் முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியது என்ன? ஒரு நிறுவனத்தை ஆரம்பித்தவர், அதிலிருந்த தன்னுடைய முதலீட்டை குறைக்கிறார் என்றால், அந்த நிறுவனம் நல்லபடியாக வளர்ந்து, நல்ல லாபம் ஈட்டி, அதன் மூலம் அவரது பங்குகளின் மதிப்பு கூடும் என்பதில் அவருக்கே நம்பிக்கை இல்லை என்று அர்த்தம். இதையே வேறு விதமாக யோசித்தோம் என்றால், ஒருவேளை அவருக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்லலாம் அல்லது அந்த நிறுவனம் வளராது என்பதை அவர் உறுதியாக நம்புகிறார் என்றும் சொல்லலாம்..!!! இப்படி பட்ட சூழ்நிலையில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் பங்குகளில் நாம் நமது பணத்தை முதலீடு செய்யலாமா, செய்தால் நம் முதலீட்டின் எதிர்கால மதிப்பு என்னவாக இருக்கும் என்பதை இப்பொழுதே சொல்லி விடலாம்!!!

பங்குகளை விற்காமல் சில Promoters அடகு வைப்பார்கள். பங்குகளை அடகு வைத்தால் எவ்வளவு பணம் கிடைத்துவிடும் என்று நாம் நினைக்கலாம். உதாரணமாக, ஒரு promoter பத்து ருபாய் முகமதிப்பில் ஒரு லட்சம் பங்குகளில் பத்து லட்ச ருபாய் முதலீடு செய்து, பொதுமக்களிடம் இருந்தும் பணம் திரட்டி நிறுவனம் ஆரம்பிக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனம் நல்ல படியாக நடந்து நல்ல லாபம் சம்பாதிப்பதால், சில ஆண்டுகளுக்கு பிறகு ஒரு பங்கின் விலை Rs.100 ஆகிறது என்றால் அவருடையை ஒரு லட்சம் பங்கின் சந்தை மதிப்பு ஒரு கோடி ரூபாயாக இருக்கும். பொதுவாக பங்குகளை அடமானமாக வைத்துக்கொண்டு பணம் கொடுக்கும் வங்கிகள், பங்கின் சந்தை மதிப்பில் சுமார் 50 முதல் 60 சதவீதம் வரை கடனாக கொடுக்கும். ஆக பத்து லட்ச ருபாய் முதலீடு செய்து வங்கி மூலமாக சுமார் 50 முதல் 60 லட்சம் வரை promoter கடன் வாங்கலாம். ஒருவேளை கடனுக்கு வட்டியை கொடுக்காமல் இருந்தால் ஒரு அளவுக்கு மேல் வங்கி அந்த பங்குகளை சந்தையில் விற்று தன்னுடைய கடனை சமன் செய்து விடும். இப்படித்தான் சத்யம் விஷயத்தில் நடந்தது.

சில Promoters பங்குகளை அடகு வைத்துவிட்டு அந்த பணத்தில் அடுத்த நிறுவனம் ஆரம்பித்தேன் என்று சொல்லுவார்கள். இது எவ்வளவு தூரம் உண்மை என்பதை அவ்வளவு எளிதாக நாம் உறுதி செய்துவிட முடியாது. ஆக, Promoters பங்குகளை விற்றாலோ அல்லது அடகு வைத்தாலோ அந்த நிறுவன பங்குகளை நீண்டகால அடிப்படையில் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. ஏனென்றால் இது நிறுவனத்தை ஆரம்பித்து நடத்துபவரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விஷயம். அவர் ஆரம்பித்த நிறுவனத்தை அவரே பெரிதாக நம்பவில்லை என்னும் போது நாம் மட்டும் எப்படி நம்புவது? பங்கு சந்தையில் முதலீடு செய்யும் போது எவ்வளவு லாபம் சம்பாதிக்க முடியும் என்று கனவு காணும் முன், நாம் போட்ட பணம் நஷ்டமில்லாமல் நம் கைக்கு திரும்ப கிடைக்குமா என்பதை ஒருமுறைக்கு பலமுறை யோசித்துதான் முடிவு செய்ய வேண்டும். பங்கு சந்தையில் முதலீடு செய்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு நஷ்டமடைந்தவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்கள்தான். யாரோ சொன்னார்கள் என்று ஏதோ ஒரு பங்கில் முதலீடு செய்துவிட்டு, அவ்வளவு கஷ்டப்படு சம்பாதித்த பணத்தை இப்படி எளிதாக தொலைத்து விடலாமா? அதனால் லாபத்தை பற்றி கனவு காணும் முன், நஷ்டத்தை தவிர்ப்பது அல்லது முதலீடு பாதுகாப்பானதுதானா என்று ஓரளவு உறுதிபடுத்திக்கொண்டால் நல்லது. எவ்வளவு நல்ல நிறுவன பங்காக இருந்தாலும், சந்தையின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, பங்கின் விலையும் கூடி ... குறைந்து ... மீண்டும் கூடி...இப்படி ஒருவித ஏற்ற இறக்கத்தோடுதான் விலை நீண்ட காலத்தில் கூடுமே தவிர, முதலீடு செய்த நாள் முதல் கூடிக்கொண்டே இருக்காது. அதனால் நல்ல நிறுவன பங்குகளை தேர்ந்தெடுத்து வாங்கினால் லாபம் அடைய முடியும்.

பங்குகளை விற்பது அல்லது அடகு வைப்பதற்கு மாறாக,சில நிறுவனங்களில் Promoters தன்னுடைய பங்கை கூட்டுவார்கள் - அதாவது ஏற்கனவே இருக்கும் பங்குகளுக்கு மேல் இன்னும் பங்குகளை வாங்கி நிறுவனத்தில் தன்னுடைய முதலீட்டை கூட்டுவார்கள். அப்படி கூட்டுகிறார்கள் என்றால், அவர்கள் அந்த நிறுவனத்தின் மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படிப்பட்ட நிறுவனங்களில் நாம் முதலீடு செய்தால் நிச்சயம் அந்த முதலீடு நல்ல வருமானம் கொடுக்கும்.


இதுவரை Promoters Holding பற்றி மட்டும் பார்த்தோம். இனி வரும் பதிவில், Shareholding Pattern என்று சொல்லப்படும், நிறுவனத்தின் மூலதனத்த்தில் யார் யாரெல்லாம் முதலீடு செய்திருக்கிறார்கள் என்னும் தகவலை எப்படி பெறுவது, அதை நீண்டகால முதலீட்டுக்கு எப்படி பயன் படுத்துவது என்பது பற்றி பார்போம்

Saturday, April 11, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 9

இதுவரை எழுதிய பதிவுகளில் ஒரு நிறுவனத்தின் லாப நஷ்ட கணக்கில் என்னென்ன பார்க்க வேண்டும் என்று கவனித்தோம். அதில் மிக முக்கியமானது EPS என்பதையும் பார்த்தோம். இந்த பதிவில் EPS-ஐ எப்படி பயன்படுத்துவது என்று பார்போம்.

EPS என்பது ஒரு நிறுவனத்தின் பங்கு எவ்வளவு சம்பாதித்தது என்பதை குறிக்கும். அனால் எந்த நிறுவனமும் சம்பாதித்த அனைத்து பணத்தையும் பங்குதாரர்களுக்கு Dividend ஆக தருவதில்லை. EPS இன் ஒரு பகுதியை Dividend ஆக நிறுவனம் பங்குதாரர்களுக்கு கொடுக்கும். ஆக ஒரு நிறுவனத்தின் EPS நன்றாக இருந்தாலும் அது Dividend தருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். சில நிறுவனங்கள் நிறைய EPS சம்பாதித்திருப்பதாக கணக்கு காட்டி இருந்தாலும், அந்த நிறுவனம் Dividend தரவில்லை என்றால் ஒன்று அந்த நிறுவனம் சம்பாதித்த பணத்தை விரிவாக்கத்திற்கு பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் அந்த நிறுவனத்தில் பணப்பிரச்சினை இருக்கிறதாக நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதாவது அந்த நிறுவனம் நல்ல லாபம் சம்பாதித்திருந்தாலும், விரிவாக்கம் எதுவும் செய்யவில்லை எத்ன்றால் Dividend கொடுக்க அதனிடம் பணம் இல்லாமல் இருக்கலாம். அப்படியானால் சம்பாதித்த பணம் எல்லாம் எங்கே போனது என்று ஒரு கேள்வி வரும். அந்த நிறுவனத்தால் விற்பனை செய்த பணத்தை ஒழுங்காக வசூலிக்க முடியாமல் இருந்திருக்கலாம். சில நிறுவனங்கள் நல்ல லாபம் காட்டினாலும், Dividend தர முடியாமல் இருந்து, அதற்கு பதில் Bonus Share கொடுத்து பங்குதாரர்களை சமாதான படுத்தலாம். அதனால் EPS அதிகமாக இருந்தாலும் வருடா வருடம் நிறுவனம் Dividend தருகிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். தொடர்ந்து Dividend கொடுத்துக்கொண்டிருக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம்.

மேலும் EPS என்பது வருடா வருடம் கூடிக்கொண்டிருக்க வேண்டும். ஒவ்வொரு மூன்று மாதத்திற்கு ஒருமுறை காலாண்டு அறிக்கையை பங்குச்சந்தையில் சமர்பிக்க வேண்டும் என்பது பங்குசந்தையின் விதி. அதனால் ஒவ்வொரு காலாண்டு அறிக்கையையும் நாம் கவனிக்க வேண்டும். விற்பனை கூடி இருக்கிறதா, Operating Profit கூடி இருக்கிறதா, என்பதை எல்லாம் கவனிக்கும் நேரத்தில் EPS கூடி இருக்கிறதா என்பதையும் கவனிக்க வேண்டும். எந்த நிறுவனமும் எப்பொழுதுமே நல்ல நிறுவனமாக இருப்பதில்லை. இன்று நல்ல நிலையில் இருக்கும் நிறுவனம் அடுத்த ஆண்டு மோசமாக பாதிக்கப்படலாம். அதனால் காலாண்டு அறிக்கையை கவனமாக பார்க்க வேண்டும். இவை எல்லாம் நல்ல படியாக இருந்தால், அந்த நிறுவனத்தின் பங்குகளில் முதலீடு செய்யலாம். அந்த நிறுவனம் எதிர்காலத்தில் நல்ல லாபம் சம்பாதித்து வளரும்போது, அதன் காரணமாக நாம் வைத்திருக்கும் பங்குகளின் விலையும் கூடும்.

இது மட்டுமில்லாமல் பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 7 இல் குறிப்பிட்டிருந்தது போல், ஒரு பங்கின் Book Value என்னவாக இருக்கிறது என்பதையும் பார்க்க வேண்டும். பொதுவாக Book Value என்பது சந்தை விலையை நிர்ணயிப்பது இல்லை என்றாலும், ஒரு பங்கின் Book Value நல்ல நிலையில் இருந்தால் அந்த நிறுவனம் ஏற்கனவே நல்ல முறையில் நடத்தப்பட்டு அதனால் லாபம் அடைந்திருக்கிறது என்று அர்த்தம். Book Value என்பது அந்த நிறுவனம் ஏற்கனவே சம்பாதித்து வைத்திருப்பதால் அடைந்திருக்கும் மதிப்பு. ஆனால் சந்தை விலை என்பது, எதிர்காலத்தில் இந்த நிறுவனம் எப்படி வளரும் என்னும் கணிப்பை வைத்து நிர்ணயிக்க படுகிறது. அதனால் அனேகமாக எல்லா பங்குகளின் சந்தை விலையும், Book Value-வை விட அதிகமாகவே இருக்கும். ஆனால் இதற்கு மாறாக, சில பங்குகளின் Book Value சந்தை விலையை விட அதிகமாக இருக்கும். ஏன் இப்படி? சில நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் இன்னும் பிரபலம் ஆகாமல் இருக்கலாம். நல்ல நிலையில் நிறுவனம் நடந்துகொண்டிருந்தாலும், முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்காத வரை அந்த நிறுவன பங்கின் சந்தை விலை கூடுவது என்பது கஷ்டமான காரியம். இன்று மிக பிரபலமாக இருக்கும் பல நிறுவனங்கள் ஒரு காலத்தில் வெளி உலகுக்கு தெரியாமல் இருந்தவைதான். அதனால் அப்படி பட்ட நிறுவனத்தின் பங்குகளை கவனமாக தேர்ந்தெடுத்து வாங்கினால் எதிர்காலத்தில் நல்ல லாபம் கொடுக்க வாய்ப்பு உண்டு. இந்த மாதிரி சந்தை விலையை விட Book Value அதிகம் இருக்கும் நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதை Value Buy என்று சொல்கிறார்கள்.

Book Value அதிகம் இருக்கிறது என்பதற்காக மட்டுமே பங்குகளை வாங்கி விடக்கூடாது. அந்த நிறுவனம் என்ன தொழிலில் இருக்கிறது, அந்த தொழிலுக்கு எதிர்காலத்தில் இருக்கும் வாய்ப்பு, Promotors என்று சொல்லப்படும் நிறுவனத்தை ஆரம்பித்தவர்களை பற்றி தெரிந்துகொள்ளுதல் மற்றும் Promotors நிறுவனத்தில் எவ்வளவு பங்கு வைத்திருக்கிறார்கள் என்பது பற்றி எல்லாம் அலசி பார்த்து வாங்கவேண்டும். இது பற்றி வரும் பதிவில் பார்போம்.
Page copy protected against web site content infringement by Copyscape