You will make it....

You will make it....

Tuesday, January 27, 2009

பங்கு சந்தை என்பது சூதாட்டமா? - பாகம் 1

இதே தலைப்பில் முன்னுரையை தொடர்ந்து, இப்போது பங்கு என்றால் என்ன என்று பார்க்க போகிறோம்.

ஒரு தொழில் நடத்த முதலீடு வேண்டும். அந்த முதலீட்டை ஒருவரே செய்தால் அவரை உரிமையாளர் என்கிறோம். அதாவது அந்த தொழிலில் இருந்து வரும் லாப நஷ்டங்கள் அவர் ஒருவரையே சேரும். இதை proprietorship என்கிறோம். அதே முதலீட்டைஇரண்டு அல்லது மூன்று பேர் சேர்த்து செய்தல் லாப நஷ்டங்கள் அதனை பங்குதாரரையும் சேரும். இதை partnership என்கிறோம்.

மேலே சொன்ன முறையில் பெரிய அளவிலான மூலதனத்தை திரட்டுவது கஷ்டமான காரியம். உதாரணமாக ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு செய்வது என்பது இயலாத காரியம். ஆக நிறய முதலீடு தேவைப்படும் தொழில் என்றால் அதுக்கு பணத்தை நிறைய பேரிடம் முதலீடாக வாங்கி லிமிடெட் கம்பெனி ஆரம்பிக்க படுகிறது. அப்படி லிமிடெட் கம்பெனி ஆரம்பிக்கும் போது, முதலீட்டை சிறு சிறு பாகங்களாக பிரித்து (பங்கு) ஒவ்வொருவரும் பங்குகளை வாங்கி அந்த நிறுவனத்தில் முதலீடு செய்வது தான் பங்கு முதலீடு என்பது.

சரி ஒரு நிறுவனத்தில் பங்குகளை வாங்கிவிட்டோம் (எப்படி பங்கு வாங்கலாம் என்பது பற்றி அப்புறம் எழுதுகிறேன்). நமக்கு பணம் தேவை படும் போது அந்த பங்குகளை விற்க நினைக்கிறோம் என்றால் யாரிடம் விற்பது? இதற்காத உருவாக்க பட்டதுதான் பங்கு சந்தை. இங்கே ஒரு விஷயத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். நாம் நிறுவனத்தில் பங்கு வாங்கியிருந்தாலும், அந்த நிறுவனம் நம்மிடமிருந்து பங்குகளை திரும்ப வாங்காது. ஒரு நிறுவனம் தான் வெளியிட்ட பங்குகளை திரும்ப வாங்குகிறது என்றால், அது தன்னுடைய மூலதனத்தை திருப்பி கொடுக்கிறது என்று அர்த்தம். அப்படி திருப்பி கொடுத்தால் அந்த நிறுவனம் எப்படி தொழில் செய்ய முடியும்? ஆக ஒரு நிறுவனம் பங்கு வெளியிட்டு பணம் பெற்றுகொண்டது என்றால், அந்த பணத்தை அந்த நிறுவனம் திருப்பி தராது. நிறுவனத்தை மூடும் சூழ்நிலை வந்தால் மட்டுமே, மூடியதும் கடன்களை எல்லாம் அடைத்து விட்டு மீதி ஏதாவது பணம் இருந்தால் மட்டுமே ஷேர் வாங்கியவருக்கு பணத்தை திருப்பி கொடுக்கும்.

இப்படி பொதுமக்களிடம் இருந்து முதலீடாக வாங்கிய பணத்தை வைத்து கம்பெனியை நிர்வாகம் செய்வது யார்? proprietorhsip என்றால் முதலாளியாக இருக்கும் நபர் நிர்வாகத்தை கவனித்து கொள்வார். partnership என்றால் partners நிர்வாகத்தை கவனித்து கொள்வார்கள். கம்பனியில் முதலீடு செய்தவர்கள் எண்ணிக்கையில் அதிகம் என்பதால் அவர்களால் நிர்வாகம் செய்ய முடியாது. எனவே கம்பனி நிர்வாகம் குறிப்பிட்ட சில நபர்களிடம் ஒப்படைக்கப்படும். கம்பனியை நிர்வகிக்கும் நபர்களை board of directors என்று சொல்கிறோம். கம்பனியை ஆரம்பிக்க முயற்சி எடுத்தவர் கம்பனியில் அதிக ஷேர் வைத்திருப்பார். அவர் தலைமை பொறுப்பில் இருப்பார் (சத்யம் ராஜு மாதிரி) .

ஒரு நிறுவனம் ஆரம்பிக்கும் போது அல்லது அதன் விருவாக்கதிற்கு பணம் தேவை படும் போது ஷேர் வெளியிடும். அப்படி வெளியிடப்படும் ஷேர்களை நாம் நேரடியாக கம்பனியிடமே வாங்கிகொள்ளலாம். ஒரு நிறுவனம் முதன்முறையாக ஷேர் வெளியிடும் போது அதை IPO (Initial Public Offer) என்கிறோம்.

கம்பனி ஷேர் வெளியிடும் போது நம்மால் வாங்க முடியவில்லை என்றால், அதே கம்பனி பங்குகளை நாம் எப்படி வாங்குவது? இங்குதான் பங்கு சந்தை என்னும் இடம் தேவைப்படுகிறது. ஆக நம்மிடம் இருக்கும் பங்குகளை விற்கவோ அல்லது ஒரு கம்பனி நல்ல நிலையில் செயல்படுகிறது என்று முடிவு செய்து அந்த கம்பனியில் பங்குகளை நாம் வாங்க வேண்டும் என்றாலோ நாம் நாட வேண்டிய இடம் பங்கு சந்தை. பங்கு சந்தையில் பங்குகள் பரிவர்த்தனை செய்வதில் உள்ள பணம் கம்பனிக்கு போய் சேராது. அது பங்கு வாங்குபவர் விற்பவரோடு முடிந்து விடும். இப்போது நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். கம்பனிக்கு எந்தவித லாபமும் இல்லாமல் ஏன் பங்குகளை பங்கு சந்தையில் அனுமதிக்கிறது? ஏனென்றால் அந்த கம்பனியில் முதலீடு செய்தால் எப்போ வேண்டுமானாலும் நம் பணத்தை நாம் பங்கு சந்தை மூலமாக பங்குகளை விற்று எடுத்துக்கொள்ள முடியும் என்று முதலீட்டளர்களுக்கு நம்பிக்கை வரவேண்டும். அதுவுமில்லாமல், பங்கு சந்தையில் பங்குகளின் விலை அதிகமானால் கம்பனியை ஆரம்பிதவருடைய பங்குகளின் மதிப்பும் கூடும். இதுதான் பங்கு பரிவர்த்தனை அல்லது பங்கு சந்தையின் அடிப்படை.

இனிவரும் பதிவுகளில் பங்குகளை வாங்குவது விற்பது எப்படி, பங்குகளை select செய்வது எப்படி, என்னென்ன விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை எல்லாம் விரிவாக பார்க்கலாம்.

உங்களது கருத்துக்கள் வரவேற்கபடுகின்றன.

3 comments:

ஷாஜி said...

நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்...

Anonymous said...

(நல்ல முயற்சி... வாழ்த்துக்கள்...)

வருகைக்கு நன்றி ஷாஜி.

Anonymous said...

miga arumayavum, thelivagavum kooriyulleergal... vaazthukkal...

Param Gates

Page copy protected against web site content infringement by Copyscape